கும்பகோணம், ஆக. 29 –
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியின் கீழத் தெரு ஸ்ரீசுந்தரவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் நிரப்பிய கடங்கள் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாக சாலை பிரவேசமும், அதன் பிறகு, ஹோமத்திற்கான பல்வேறு நறுமண மூலிகை பொருட்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன், முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து மூலவர் விமானம் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழத்தெரு கிராம மக்கள், நாட்டாமை, பஞ்சாயத்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.