திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு விழாவில் 353 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் கடனுதவியினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் டி.காமாட்சி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் காஞ்சி புதிய கிளையை திறந்துவைத்து குத்து விளக்கேற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து காஞ்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் சிறு வணிக கடன் , மகளிர் தொழில் முனைவோர் கடன், மகளிர் சுயஉதவி கடன் மற்றும் பயிர் கடன் திட்டங்களின் கீழ் 353 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கே.ராஜ்குமார், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைப்பதிவாளர்கள் வசந்த லட்சுமி, பிரேம் ஆரோக்கியராஜ் மைய வங்கி பொது மேலாளர் ஏ.இளங்கோவன் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சி.சுரேஷ்குமார், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பி.பி.முருகன், காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கோபால், ஒன்றியக்குழு உறுப்பினர் பூங்கொடி ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய கூட்டுறவு வங்கி காஞ்சி கிளை மேலாளர் என்.முருகன் நன்றி கூறினார்.