புதுடெல்லி:
விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதும் அவரை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார்.
‘விங் கமாண்டர் அபிநந்தனை தாயகம் வரவேற்கிறது. உங்களது அளப்பரிய துணிச்சலால் இந்த நாடு பெருமை கொள்கிறது’ என நேற்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய வீட்டுவசதி அமைச்சகம் சார்ந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
‘இந்தியா என்ன செய்கிறது? என்பதை உலகம் குறிப்பெடுக்க தொடங்கியுள்ளது. அகராதியில் உள்ள சொற்களின் பொருட்களை மாற்றும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. அபிநந்தன் என்ற (சமஸ்கிருத) சொல் முன்னர் வரவேற்பதற்கான வார்த்தையாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது அபிநந்தன் என்னும் சொல்லுக்கான அர்த்தமே மாறிவிட்டது. இனி மாறியும் விடும்’ என மோடி குறிப்பிட்டார்.