பெரியாபாளையம், நவ. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள மாளந்தூர் பகுதியில் நேற்று 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் போன்ற பொருள் ஒன்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுக்குறித்து உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வெடுகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சென்னையிலிருந்து மருதம் என்று அழைக்கப்படும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் மேலும், வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சுகள் உள்ளனவா என மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனை கருவிகளை வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரை கிலோ மீட்டர் தூர சுற்றளவிற்கு சோதனைகள் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து பூமிக்கு அடியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சரை முழு சோதனை செய்தப் பின்பு, வெடிக்குண்டு நிபுணர் குழுவினர், அதனைக் கைப்பற்றி திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைக்க எடுத்துச் சென்றனர். மேலும் அதுக்குறித்து தொடர் ஆய்வுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் எக்காலத்தை சாந்தது எனவும், மற்றும் அதன் தன்மைகள் குறித்த முழு விவரமும் தெரிய வரும் என பெரியபாளையம் காவல்துறையினர் தெரிவித்தனர்.





















