குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று தனியாக நின்று கொண்டிருந்த ஆசிரியை ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் ரம்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரம்யா இறந்ததை அறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் வந்தார். அங்கு ஆசிரியை ரம்யா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

பின்னர் அவர் இதுகுறித்த பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார்.

உடனே நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தார். ஏன் வந்தார். ரம்யாவை கொலை செய்த வாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யாவின் தந்தை சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் எனது வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் என் மகள் ரம்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். அதன் பின்னர் ரம்யா பள்ளி செல்லும்போது வழி மறித்து, தன்னை நீதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜசேகர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ரம்யாவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை ரம்யா பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எனவே இந்த சம்பவத்துக்கும், ராஜசேகருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையொட்டி வாலிபர் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிவளாகத்தில் ஆசிரியை கொடூர முறையில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here