கும்பகோணம், டிச. 2 –
கும்பகோணம் அருகே விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்ததால் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 500 விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், 200 நபர்களுக்கு மட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ற வாரம் இந்த கூட்டுறவு சங்க தலைவரிடம் கேட்டதற்கு இவ்வாரம் கடன் தருவதாக கூறிய நிலையில், இன்று இந்த கூட்டுறவு சங்கத்திற்கு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடன் கேட்டனர்.
விவசாயிகள் திரண்டு வந்து கடன் கேட்டதைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் சங்கத்தை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




















