பூவிருந்தவல்லி, மே. 18 –

சென்னை பூந்தமல்லி அருகே சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 25 கோடி மதிப்பிலான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சை கல் சிவலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்படைக்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இரண்டு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தபட்டனர்.

சென்னை பூந்தமல்லி அருகே பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் சிவலிங்கம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், ஐஜி தினகரன் வழிகாட்டுதலின்படி, ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில், டிஎஸ்பி கதிரவன், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ், மற்றும் போலீசார்கள் பிரபாகரன், பாண்டியராஜ், சுந்தர் ஆகியோர் கொண்ட  தனிப்படையினர், கடத்தல்காரர்களிடம் சிலை வாங்க செல்லும் வியாபாரிகளை போல அணுகி, கடத்தல்காரர்களை நம்ப வைத்து, இச்சிலை குறித்து பேசிய போது இதன் விலை ரூபாய் 25 கோடி என கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் சிலையை காண்பித்தவுடன், சென்னை வெள்ளவேடு புதுகாலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (46) மற்றும் சென்னை புதுச்சத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (42) ஆகிய இருவரிடமிருந்து சிலையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சிலை திருட்டு தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்ட சிலையை நேற்று மாலை ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் நீதிபதி முன்பு ஆஜர் செய்தனர்.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான பச்சை கல்லிலான லிங்கத்தினை உலோகத்தினால் ஆன நாகாபரணம் தாங்கி அதன் பின்பும் பறக்கும் நிலையிலான கருடாழ்வாருடன் சுமார் 29 செ.மீ உயரமும், 18 செ.மீ அகலமும், பீடத்தின் அடிப்பாக சுற்றளவு 28 செ.மீட்டராகவும், எடை 9 கிலோ 800 கிராமாகவும் உள்ளது, பச்சைக்கல் லிங்கம் 7 செ.மீ உயரமும், அதன் சுற்றளவு 18 செ.மீட்டராகவும் உள்ளது. லிங்கத்தின் கீழே சிவபெருமானின் 5 முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. நாகாபரணத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை உயர்த்தி பறக்கும் நிலையில் காணப்படுகிறது. இந்த அம்சங்கள் நேபாள பாணியில் அமைந்த சிலை என தெரிய வருகிறது. இருப்பினும் பச்சைகல்லினால் ஆன இந்த லிங்கம் பச்சை மரகதலிங்கமாக, தொன்மையான சிவலிங்கம் தானா என்பது குறித்து புராதான சிலைகள் குறித்து வல்லுனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு மற்றும் அறிக்கைக்கு பின்னரே இச்சிலைக்கான தொன்மையும், பச்சை மரகதலிங்கமா, அதன் உண்மையான மதிப்பும் தெரியவரும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here