கும்பகோணம், மார்ச். 18 –

கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 113வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழா இன்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருநடனப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல, இன்று 113வது ஆண்டு திருநடனப்பெருவிழா விநாயகர், காத்தாயியம்மன், பச்சையம்மன், பத்ரகாளியம்மன், மன்னார்சாமி, சூலாயுத தூபி, மகா மாரியம்மன், மதுரைவீரன், வால் முனீஸ்வரன், முத்து முனீஸ்வரன், சங்கிலி கருப்பன் லாட சந்நியாசி உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, நந்தியம்பெருமான் வரையப்பெற்ற திருக்கொடி, நாதஸ்வர மேள தாளம் முழங்க, மந்திரங்கள் ஜபிக்க, கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து திருக்கோயில் ஸ்தானிகர் துரை, உதவி ஸ்தானிகம் கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் திருவிழாவிற்காக விரதம் தொடங்க காப்புக்கட்டிக் கொண்டனர். பங்குனி திருநடன பெருவிழா இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நண்பகல் காத்தாயியம்மனுக்கு சம்வத்ஸரா அபிஷேகமும், அன்னப்படையலும், மாலை சர்வ அலங்காரத்தில் உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. பின்னர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சக்தி வேல், சக்தி கரகம், பால் குடத்துடன் காவிரி டபீர் படித்துறையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயிலுக்கு வந்து அங்கு வசந்த பாலாபிஷேகமும், கஞ்சிவார்த்தல் நிகழ்வும் பிறகு, 23ம் தேதி இரவு, தாய் வீட்டு சீதனம் எடுத்து வருதலும் பத்ரகாளியம்மன் எழுந்தருளல், ஊஞ்சல் உற்சவத்துடன் ஆனந்த திருநடனக்காட்சியுடன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

பின்னர் 28ம் தேதி திங்கட்கிழமை கும்ப பூஜையுடன் விடையாற்றி நடைபெற்று.  இவ்வாண்டிற்கான பங்குனி திருநடனக்காட்சி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here