கும்மிடிப்பூண்டி, மார்ச். 18 –
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ. கே. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, கும்மிடிபுண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் க.ஏ. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ. கே. மூர்த்தி கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கட்சி வளர்ச்சிப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் சென்று கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், விருப்பமுள்ளவர்கள் தங்களுக்கு என்ன பொறுப்பு வேண்டும் என்பதை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அளித்தால் அதனை கட்சித்தலைமை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் என்றார்.
மேலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியினர் திட்டமிட்டு பாமக வேட்பாளர்களை தோற்கடித்ததாகவும், இனி வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தெரிவித்த கருத்தை வலியுறுத்தினார்.























