அகமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பா.ஜனதாவில் இணைந்துள்ளார். குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் விவசாயத்துறை மந்திரி பால்டு முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். பா.ஜனதாவில் இணைந்த பின்னர் ரிவபா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
‘பிரதமர் மோடியே எனக்கு உந்துசக்தி. அதனால்தான் பா.ஜனதாவில் இணைகிறேன். தனியாக என்னால் எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது. அதே நேரம் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளதன் மூலம் சிறந்த மக்கள் சேவையை அளிக்கமுடியும். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான்.
அவர்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளவும், ஆண்கள் இல்லாத நிலையில் தங்களை உயர்த்தி கொள்ளக்கூடிய அளவுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும். இதுவே எனது முதன்மையான குறிக்கோளாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்ததை ஒரு குறுகிய எண்ணத்துடன் பார்க்கக் கூடாது. என்னுடைய தற்போது எண்ணம், கட்சிக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்பது மட்டும் தான். இதை தவிர இந்த மேடையில் பேசுவதற்கு இல்லை’.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.