திருவண்ணாமலை, ஆக.2-

திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி, இராஜகோபுரம் எதிரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா, தாசில்தார் பி.வெங்கடேசன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ப.கார்த்திக் வேல் மாறன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பிரட், வினோத்கண்ணா, கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் கமலேஷ்குமார், அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் நேற்று முன்தினம் சென்னையில் கொரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 3ம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரா வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் திருவண்ணாமலை நகராட்சி தேரடி வீதியில் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு செல்பி புகைப்படம் பொதுமக்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டு, பலூன்கள் பறக்கவிட்டார். இதனை தொடர்ந்து, அதி நவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு குறும் படங்கள் திரையிட்டு காட்டப்படுவதையும், தேரடி வீதியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும், தேரடி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள், வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், கடைகள், பூ மார்கெட் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரிடமும் அரசு வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கை கழுவுதல் குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியதாவது ‘கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய நோயான கொரோனாவிலிருந்து பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். இதற்காக அரசு பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது, ஆனால் பொதுமக்கள் அதனை சரியாக கடைபிடிக்கவில்லை.ஒவ்வொருவருக்கும் தனக்கான பொறுப்பு வர வேண்டும். முகக்கவசம் சரியாக அணிய வேண்டும், இரண்டு முகக்கவசம் அணிந்தால் கூடுதல் பாதுகாப்பு, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், சானிடைசர், சோப்பு கொண்டு கைகழுவ வேண்டும்.

தற்போது பெரும்பான்மையான பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை சரியாக கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் சென்னையில் கொரோனா விழிப்புணர்வு ஒரு வாரம் நடைபெறும் நிகழ்ச்சிகள் துவக்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 7ந் தேதிவரை தொடர்ந்து ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறுகிறது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பல்வேறு குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாக உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். கொரோனா நோய் தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூச் செலுத்திக் கொள்வது. இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மருத்துவ வல்லுநர்கள் மூன்றாவது அலை குறிப்பாக குழந்கைள், சிறுவர்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் தற்போது தடுப்பூசி செலுத்தும் முகாம் உங்கள் வீடுகளின் அருகில் நடைபெற்று வருகிறது. மேலும், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களில் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை வரும் என எதிர்பார்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை நகராட்சி, புதிய வாணியங்குள 8-வது தெருவில் நடைபெற்று வரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here