கோவை:
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு 1½ அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலில் சாமி சிலை திருடப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை திருடி சென்றுள்ளனர். மேலும், உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
கோவிலில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிலையை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.