கோயம்புத்தூர், செப். 5 –

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நீலகிரி மலைரயிலுக்கான புதிய நீராவி என்ஜின் வந்தடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இம்மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம் மலை ரயிலின் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சீரமைக்கப்பட்டும் நவீனப் படுத்தப்பட்டும் வருகிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கான புதிய நீராவி என்ஜின் தயாரிக்க ரயில்வே நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நீலகிரி மலை ரயிலின் பழமை மாறாமல் தயார் செய்யப்பட்டு வந்த புதிய என்ஜின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தது,

இதையடுத்து திருச்சி பொன்மலையில் இருந்து புதிய ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டது.  மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடைந்த என்ஜினை ரயில்வே ஊழியர்கள் கிரேன் உதவியுடன்  தண்டவாளத்தில்   இறக்கி வைத்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை மீண்டும் டிசம்பர் மாதம் 31 ம் தேதி முதல் துவங்கியது. மீண்டும் பரவிய கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நான்கு மாத முடக்கத்திற்கு பின்னர் மீண்டும்   இன்று முதல் நீலகிரி மலை ரயில் வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் மலை ரயில் போக்குவரத்து துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here