ராசிபுரம், ஏப். 14 –
ராசிபுரம் அடுத்துள்ள வடுகம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் எருமை கிடா பலி கொடுத்தல் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு கோவிலுக்கு எருமை கிடாவை அக்கோயில் கிடாபூசாரி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்து.
அதனைத் தொடர்ந்து இன்று விடியற்காலை புனித நீருடன் பூங்கரகம் எடுத்துக் கொண்டு சாமி கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவிலில் முன்பு தயார் நிலையில் இருந்த எருமை கிடாவை கிடா பூசாரி நீண்ட அரிவாளால் கழுத்தில் வெட்டி காளியம்மனுக்கு பலி கொடுத்தார். இதனை தொடர்ந்து பூசாரி முதலில் தீமித்தார். அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். பின்னர், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இவ்விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.























