கும்பகோணம், ஏப். 21 –

கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ரூ 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.

திருவிடைமருதூர் தாலுக்கா முள்ளுகுடி ஊராட்சியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷின் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதால், கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் வெகுதூரம் சென்று மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் சுழல் ஏற்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிக்கான 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீன தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமத் சுப்பிரமணிய சுவாமிகள் முன்னிலையில் பள்ளியில் பயின்ற முன்னாள் மற்றும் இந்நாள் பள்ளி மாணவர்கள் இணைந்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கட்டிடம் கட்டித்தர ஏற்பாடு செய்திருந்த தருமபுர ஆதீனத்திற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். பள்ளி மாணவர்களே அடிக்கல் நாட்டிய நிகழ்வு அப்பகுதியில் மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here