தஞ்சாவூர், டிச. 30 –

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் நானூறு வீதம் மானியம் வழங்குவதற்கு திட்ட வழிகாட்டுதல் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் அனைத்து வேளாண் உதவி இயக்குனர்களுக்கும் வட்டார வாரியாக பயறு சாகுபடிக்கான இலக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.

வேளாண் இணை இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்திற்கு 3,500 ஏக்கர் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு 50% மானியத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 400 வீதம் மானியம் வழங்கிட முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்திடவும் 48 கிராமங்களிலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிர் சாகுபடி முனைப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் அறிவுரைப்படி வட்டார அளவிலான நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் அண்டமி கிராமத்தில் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் நோக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்திகள் திட்டத்தின் விபரம் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்கள் பயனாளிகள் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் விதம் மற்றும் உளுந்து விதைக்கான மானிய விகிதம் போன்றவை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வம்பன் 8 ரகத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி டி ஏ பி இலைவழி உரம் தெளித்தலின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் கிடைக்கும் கூடுதல் மகசூல் பற்றியும் எடுத்துக் கூறினார். அட்மா திட்ட அலுவலர் ராஜு ரைசோபியம் உயிர் உரம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். தஞ்சாவூர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு ரசாயன உரத்தை தவிர்த்து கடல்பாசிபுரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், டிவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்வதால் எவ்வாறு விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது பற்றியும், நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடியில் களைக்கட்டுப்பாடு பற்றியும் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதம் பயறு நுண்ணூட்டம் தெளிப்பதால் கிடைக்கும் கூடுதல் மகசூல் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

அண்டமி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர்கள் குப்புசாமி, வெங்கடாசலபதி ஞானசேகரன் மற்றும் சுமதி பாஸ்கர் ஆகியோருக்கு மானிய விலையில் உளுந்து விதையினை வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்டமி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாஸ்கர் செய்திருந்தார்.

மேலும், மதுக்கூர்  வட்டார விவசாயிகள் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்கிற முன்னுரிமை அடிப்படையில் வேளாண் உதவி அலுவலர்களிடம் தங்களுடைய பெயர், ஆதார் எண், பரப்பு மற்றும் தேவையான உளுந்து விதை ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here