திருவள்ளூர், டிச. 16 –
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் இன்று கடற் பகுதியிலும் ஏரிப் பகுதியிலும் எண்ணெய் படலம் கலந்து விட்டது. வைரவன் குப்பம் கடற்கரை பகுதியில் எண்ணெய் படலத்தால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
கோரைக்குப்பம் கடற்கரை ஓரம் பெண்கள் கிளிஞ்சல் பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எண்ணெய் படலத்தால் பெண்களின் வலைகள் சேதம் ஆயின மற்றும் காலிலும் கைகளிலும் எண்ணெய் படலம் படுவதால் பணியினை பாதியிலேயே விட்டுவிட்டு பெண்கள் கரைக்கு திரும்பினர்.
பழவேற்காடு ஏரி பகுதியிலும் கழிவாயில் படலம் படர்ந்துள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகள் ஏரி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அதுக் குறித்து மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏற்கனவே 25 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது எண்ணை படலம் படர்ந்து உள்ளதால் பழவேற்காடு மக்களின் வாழ்வாதார முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க உத்தரவிடும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















