வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நேற்று முதல் வரும் செப் 25 வரையிலான முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை, செப் . 21 –

தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர் புறங்களில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் மற்றும் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதனால் அதிகப்படியான மழைநீர் தேக்கத்தினால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும், மழைநீர் வடிகால்களில் தேங்கியிருக்கும் கழிவு அடைப்புகளினால் மழைநீர் கழிவுநீராக மாற்றம் கொள்வதினால் இதரத் தொற்று பரவும் அபாயம் ஏற்படவாய்ப்பு உள்ளது.

அதனால் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் வரும் செப். 25 -2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் மேற் கொள்ள திட்டமிடப்பட்டு இத்திட்டத்தினை நேற்று சேலம் மாநகராட்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கிவைத்துள்ளார்..

இப் பணிகளுக்காக கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மற்றும் சிறிய வடிவிலான வடிகால்கள் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுப் பொருட்களையும் படிவங்களையும் அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்டிங் இயந்திரம் ஜேசிபி மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களையும் பயன் படுத்தி இப் பணியானது துரிதமாக நடைபெற அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப் பணிகளுக்காக உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து ஆறு நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

மாநகராட்சிகள்:

14 மாநகராட்சிகளிலுள்ள 829 வார்டுகளில் 1362 இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டு 23, 838 பணியாளர்கள் ஈடுப்படுத்தப் படவுள்ளனர். இந்தப் பணியினை மேற் பார்வையிட 1572 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சிகள்:

7 நகராட்சி நிர்வாக மண்டலங்களிலுள்ள 121 நகராட்சிகளில் 3497 வார்டுகளில் 4591 இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு 42, 634 பணியாளர்கள் ஈடுப்படுத்தப் படவுள்ளனர். இந்தப் பணியினை மேற்பார்வையிட 3051 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகள்:

மொத்தமுள்ள 528 பேரூராட்களில் 7,951 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 25 கி.மீ நீளமுள்ள கால்வாய்களும் தூர்வாரப் படவுள்ளன. இதற்காக 2830 இயந்திரங்களும் 28, 624 பணியாளர்களும் ஈடுப் படவுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி:

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகள் மழைநீர் வடிகால் தூய்மைப் படுத்தும் பணி மேற் கொள்ளப் படவுள்ளது. இதற்காக 2,414 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மழைநீர் வடிகால் தூய்மைப் படுத்தும் கால்வாய் மொத்த தூரம் 82.884 கி.மீ ஆகும்.

மழைநீர் வடிகால் தூய்மைப் படுத்தி எடுக்கப் படும் வடிகால் படிவங்களை ( கழிவுகள் ) அகற்றும் பணி 227 சாலைகளில் மேற் கொள்ளப் படவுள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுப்படுத்தப் படவுள்ளனர். வடிகால் படிவுகளை அகற்றும் பணி 2718 ஆகும். இந்த பணிகளுக்காக 7 ஜெட்ராடிங் இயந்திரம், 3 ரோபோடிக் எக்சிவேட்டர், 1 ஆம்பியன் 3 மினி ஆம்பியன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மாநில அளவில் தூய்மைப் பணி மேற் கொள்ளும் விவரங்கள் : 

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121, நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி மேற் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். 4,623 மேற் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here