கும்பகோணம், ஏப். 24 –
ஆண்டு தோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை, பெண்கள் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள், இந்த கிராம சபையில் விவாதிக்கப்பட்டன. சிறப்பு கிராம சபை கூட்டம் நாச்சியார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து அவர் பேசுகையில் வறுமையற்ற அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து வயதினரும், உடல் நலத்துடனும் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல். குழந்தைகள் வாழவும், வளரவும், தேவையான பாதுகாப்பு அளித்து அவர்களின் முழு திறனை வெளிகொண்டு வரவேண்டும். மேலும், அனைத்து கிராம புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபாஷ் திருநாவுக்கரசு ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.























