சீர்காழி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீவைத்தியநாதர்சுவாமி திருக்கோயில் உள்ளது.
மேலும் அத்திருத்தலம் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வ முத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சந்நிதியில் அமர்ந்து அருள் பாலித்து வருகின்றனர்.
செவ்வாய் பரிகார ஸ்தலமாக இக்கோயில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வருகை புரிந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து சித்தாமிர்த தீர்த்த குள தண்ணீரை தெளித்துக் கொண்டு கற்பக விநாயகர் சந்திதி, வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய அனைத்து சுவாமி சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்தை தரிசித்தனர். அவர்களுக்கு கோவில் சிவாச்சாரியார்கள் சுவாமி பிரசாதங்களை வழங்கினர்.





















