திருவாரூர், ஆக. 15 –
இன்றைய தினம் நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், உலக அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வானில் வெண் புறாக்களை பறக்க விட்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்த மாவட்ட ஆட்சியர் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கியதோடு சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.























