கும்பகோணம், ஜூன். 12 –
கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் விநாயகர், பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன் ஆகிய தேவர்களும் மார்க்கண்டேயர், கௌதமர் உள்ளிட்ட முனிவர்களும், நளன், பாண்டவர், சந்திரசேனன், சம்புமாலி உள்ளிட்ட மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்ற தலமும் ஆகும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகப்பெருவிழா 12 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 03ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் சூர்ய பிரபை, சந்திர பிரபை, சேஷ, கிளி, பூத, பூதகி, கைலாச, காமதேனு, வெள்ளி ரிஷபம், யானை, அன்னபட்சி என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாளான இன்று நண்பகல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சூர்ய புஷ்கரணி கரையில் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு குளத்தின் படிக்கரையில், பால் தயிர் மஞ்சள் இளநீர் தேன் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு சிவாச்சாரியார் அஸ்திர தேவருடன் மும்முறை முங்கி எழ, தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூர்ய புஷ்கரணியில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனர்.





















