திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்றதும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக இன்று நடைப் பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுடன் இணைந்த ஸ்ரீ சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ராமர் சீதா லட்சுமணர் பஞ்சமுக ஆஞ்சநேயர் என பல்வேறு சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.
மேலும் அவ்வாலயத்தின் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஒரு வருடங்களாக நடைபெற்று வந்தது. அதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த ஒரு வாரமாக யாகசால பூஜைகள் நடைபெற்று புனித நீர் கடங்கள் புறப்பட்டு இன்று காலை ஆலயத்தை சுற்றி வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அவ் விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமா ராமா என்றவாறு பக்திப் பரவச முழக்கங்கள் எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல அந்த ஆலயத்தின் அருகில் உள்ள மகிழம்பு விநாயகர் ஆலயமும் முன் மண்டபம் கட்டப்பட்டு கடந்த ஒரு வாரமாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீராமர் கோயிலுக்கு 23 ஆம் தேதி மூலவர் பிரார்த்தனை விக்னேஸ்வர பூஜை முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றதைத் தொடர்ந்து மறுநாள் காலை இரண்டாம் கால மூன்றாம் காலபூஜைகள் மாலை நான்காம் கால சாற்று முறை பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை ஐந்தாம் காலபூஜை பூர்ணாஹூதி செய்யப்பட்டு கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கும்பாபிஷேக விழா குழு தலைவர் ஆர்.வி.கருணாநிதி, திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, ஆலய செயல்அலுவலர் முருகையன், ஆலய தலைமை பட்டாச்சாரியார் வரதன் உள்ளிட்டவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் அவ்விழாவில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் மற்றும் சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரும் சுவாமி மற்றும் கோபுர தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.





















