மயிலாடுதுறை, ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை ..

மயிலாடுதுறை நகரில்  கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை  ஒன்று நடமாடியது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூரைநாடு பகுதியில் வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புடன் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிறுத்தை நேற்று முன்தினம் பிடிபடாத நிலையில் நேற்று அதிகாலை மயிலாடுதுறை நகரை ஒட்டிய ஆரோக்ய நாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. அப்பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவு உள்ள கருவைக்காடு அடர்ந்த காட்டு பகுதியில் சிறுத்தை உள்ளே புகுந்தது சிறுத்தை பகலில் ஓய்வெடுத்து இரவில் வேட்டையாடும் இனம் என்பதால் அதனை மாலை நேரத்தில் பிடிப்பதற்கு வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

திருச்சி மண்டல தலைமை வன அலுவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் டோமர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் தொடர்ந்து சிறுத்தை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ளனர் அவர்கள் சென்சார் பொருத்திய கேமராவுடன் பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில் கூண்டு வைத்து பிடிப்பதற்காக  லாரியில் கொண்டுவரப்பட்ட 3 கூண்டுகளில் இறைச்சியை வைத்து சம்பந்தப்பட்ட கருவை காட்டில் வைத்தனர்.

ஆனால் இன்று காலை மூன்று கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை. வனத்துறை அதிகாரிகள் 10 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். ஆரோக்கியநாதபுரம் அடுத்து மஞ்சளாறு வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு அடர்ந்த குத்துச்செடிகள் நிறைந்த காட்டுப்பகுதி காணப்படுவதால் சிறுத்தை இடமாறி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

அதன் காரணமாக அருகிலுள்ள மறையூர் அசிக்காடு கிராமப் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சித்தர் காடு என்ற இடத்தில் ஆடு ஒன்று கடித்து குதறப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

சிறுத்தை தாக்குதலால் உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தை மயிலாடுதுறை பகுதி மக்கள் இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here