சென்னை:
கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த, 2000 ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் முறையீடு செய்துள்ளார்.
இந்த திட்டத்தை எதிர்த்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


















