கும்பகோணம், ஆக. 19 –
புகைப்பட கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினத்தினை கும்பகோண மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளையும் ஒரு சிறந்த புகைப்படக் காட்சியால் எளிதாக உணர்த்திவிட முடியும்.
புகைப்படங்கள், நமது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நீண்ட காலம் நினைவில் நிலைத்திடும்படி, பதிவு செய்கின்றன. புகைப்படங்களின் மூலம் இன்றைய நவீன காலத்து, இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் இனிமையான செய்கைகளை நினைவுகளாக சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நாள் புகைப்பட துறையின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கங்களைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த இந்த கலை வடிவத்தைத் தொடரவும், அதிகமான மக்களை இத்துறையில் ஈடுப்படுத்த செய்து அவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த தினம் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலசங்கம் சார்பில் 183 வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, அதன் சங்கத் துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் காந்தி பூங்கா முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு கேக்குகளை வழங்கினார். இதில் ஆலோசகர் கண்ணையா பிரசாத், சங்கச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மணிகண்டன் கௌரவத் தலைவர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




















