சென்னை; நவ. 20-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த நவ-18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் எதிர்வரும் 12.12.2019 முதல் 19.12.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜிடம் வழங்கினார்.
கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்கள். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார்கள். அந்த வகையில், சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நவ – 18-2019 அன்று இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் லிசி லஷ்மி, பூர்ணிமா பாக்யராஜ், சைலஜா, சாக்ஷி அகர்வால், கே. மோகன், மோகன் ராம், ஏ. தங்கராஜ், எஸ். முரளி, மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.