தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
சென்னை செ , 15 –
விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அமைச்சர் தலைமையில் நடைப் பெற்றது. அதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., இயக்குநர் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2021-22 எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப் பட்டதின் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்து காத்திருப்பு பட்டியலிலுள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் பதிவு மூப்பு அடிப்படையில் விவசாய விண்ணப்பம் செய்துள்ள விவசாய பெருமக்கள் தமது நிலையை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பெயர் மாற்றம் புல எண் மாற்றம் ஏதேனும் தேவைப் பட்டால் அதற்கான ஆவணங்களை பிரிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
இந்த தயார் நிலைப் பதிவின் அடிப்படையில் மின்வாரியம் மதிப்பீடு தயார் செய்து மின் இணைப்பு வேலைகளை முடித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ள விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப் படும். அதனடிப்படையில் விண்ணப்பதாரர் மோட்டார், கெபாசிட்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி பொருத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மின்சார கட்டணத்தை தமிழக அரசு மானியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கும் இதன் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.