கும்பகோணம், ஏப். 05 –
கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர், பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மண்ணில் எண்ணியபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் ஸ்ரீ சக்தி விநாயகர், கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், வாழ்வில் தடைகளை நீக்கி எளிதில் நற்பலன்களை அளிக்கக்கூடியவர், என்பது பக்தர்களின் நம்பிக்கை, இத்தகைய சிறப்பு பெற்ற இவ்விரு ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடத்திட இத்திருக்கோயில் திருப்பணி குழுவினரால் திட்டமிடப்பட்டு அதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 3 ஆம் தேதி திங்கட்கிழமை, முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் தொடங்கி, தொடர்ந்து 4ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மாலை என இரு வேளைகளும், இருகால யாக பூஜைகள் நடைபெற்றதையடுத்து இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, தொடர்ந்து பூர்ணாஹதிக்கு பிறகு மகா தீபாராதனையும் அதனையடுத்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
தொடர்ந்து, ரிஷப லக்னத்தில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.



















