ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பங்கேற்று சமையல் பணியாளர்கள் தயார் செய்து வைத்திருந்த உணவு வகைகளை ருசித்தும் ரசித்தும் பார்த்தார். அதனை தொடர்ந்து மாவட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் ஆயிரத்து 224 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்கள் மூலமாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு சத்தான கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அடுப்பில்லா சமையல், எண்ணெய் இல்லா சமையல், இயற்கை உணவு, ஆரோக்கியமான உணவு, சிறுதானிய உணவு, சிற்றுண்டி மற்றும் மாலை நேர உணவு என 7 தலைப்புகளின் கீழ் இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள 11 ஒன்றியங்களில் மற்றும் ஒரு நகராட்சி என மொத்தம் 12 குழுக்களாக ஒரு குழுவிற்கு சமையலர், மற்றும் சமையல் உதவியாளர் என 2 நபர்கள் வீதம் பங்கேற்றிடும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரப்பன், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சிவராமபாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உட்பட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பார்வையிட்டார்