கும்பகோணம், பிப். 4 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பனந்தாள் பகுதியில் பறக்கும்படை அலுவலர் ராஜதுரை தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உட்கோட்டை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் எந்தவித ஆவணமும் இன்றி 86 பட்டு புடவைகளை காரில் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் 86 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்து திருவிடைமருதூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். கோட்டாட்சியர் உத்தரவுப்படி கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.





















