மீஞ்சூர், டிச. 25 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ.இன்ஃப்ராஸ்ட்ரக்ஸர் நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் தானியங்கி சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள், கணினிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை 18 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும்,6 பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் கணிணிகளையும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சோலார் மின் விளக்குகளையும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை. சந்திரசேகர் வழங்கினார்.
மேலும் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கான உதவி தொகை பெறும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி கையேடுகளை ஜே எஸ்.டபள்யு பழனியப்பன் ஆகியோர் வழங்கினர்.
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
























