ராசிபுரம், ஏப். 23 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக-வின் முதல் பெண் நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் மற்றும் பெண் நகரமன்ற உறுப்பினர்களின் மக்கள் பணி சிறக்க நினைவு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
இவ்விழாவிற்கு திராவிடர் விடுதலைக் கழக ராசிபுரம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா தலைமை வகித்தார். திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நகரமன்ற தலைவர் மற்றும் நகரமன்ற பெண் உறுப்பினர்களுக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி நினைவு பரிசு வழங்கினார். விழாவில், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.பழனிவேல், திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் சுந்தரம் உட்பட தோழமைக் கட்சிகளை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.