திருவண்ணாமலை, ஜன. 8 –
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், ஆராசூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (2021-22) கீழ் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து, மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டப்பட்ட இடங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் (2020-21) கீழ் ரூ.82.35 இலட்சம் மதிப்பீட்டில் ஆடுசு-52 வங்காரம் சாலை வழியாக கயநல்லூர் ஆவணவாடி சாலையின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப் இ.ஆ.ப., செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





















