திருவண்ணாமலை, செப்.4-
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 10.09.2021 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தற்போதுள்ள கொரோனா நோய் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது.
பொது இடங்களில் உறியடி உள்ளிட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அது போன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச் செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறிலையத் துறையால் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ் வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொது மக்கள் தவறாது முகச்சவசம் அணிவதோடு அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும் போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு கூட்டத்தை முடித்த பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைப்பினர்களும் தெரிவிக்கக்கபட்டடுள்ள நடைமுறையினை ஏற்றுக்கொண்டனர். தடைகளை மீறி சிலைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்ட பொதுமக்களும் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை கட்டுபாட்டுபாடுடன் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி பண்டிகையினை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் கேட்டுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மற்றும் துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.