கும்பகோணம், மே. 08 –
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மொய்ப்பணம் வைப்பது போல் ஏமாற்றி, மொய் பையுடன் மாயமான மர்ம நபர்கள், இந்நிகழ்வால் செய்வதறியாது சுபநிகழ்ச்சி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர், வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். ராஜகோபால் தனது மகளின் பூப்புனித நிகழ்ச்சியை இன்று சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடத்தினார்.
நிகழ்ச்சிக்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் மொய்ப் பணம் வசூல் செய்ய ராஜகோபாலின் உறவினர் ரவி என்பவரின் தலைமையின் கீழ் 2பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரம் உறவினர்களிடம் மொய் பணம் வசூல் செய்தனர். ராஜகோபாலின் நண்பர்கள் போல் வந்த சிலர் மொய் பணம் வசூல் செய்யும் இடத்தில் நின்று உள்ளனர்.
அப்பொழுது மொய் பணத்தை நோட்டில் எழுதிக் கொண்டிருந்த ரவி மொய் பணம் பதிவுச் செய்யும் நோட்டை அருகிலிருந்த டேபிளின் கீழ் இருந்து எடுத்து உள்ளார். அப்பொழுது டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த பொய் பை திடீரென மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிலர் பல்வேறு பகுதிக்கும் சென்று மொய் பையை திருடிய மர்ம மனிதர்களை தேடினார்.
அவர்களை எங்கு தேடியும் கிடைக்க நிலையில், ராஜகோபால் மொய் பணத்தோடு ஓடிய மர்ம மனிதர்களை பிடித்துக் கொடுக்கும் படி சுவாமிமலை காவல்துறையிடம் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அப்பகுதியில் வந்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். சுப நிகழ்ச்சியில் நூதன முறையில் மொய்ப் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றது சுவாமிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.