கும்பகோணம், நவ. 10 –
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இக்கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.
இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி விழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் காலை – மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை தொடங்கி இரவு வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோயில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று (10-ம் தேதி) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.