சென்னை, அக். 4 –
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலயே தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவு செய்து தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயற்சித்துறை சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில் இனி மாணாக்கர்கள் தங்கள் காலத்தையும், சிரமங்களையும், பணவிரயங்கள், ஆகியவற்றை செலவிடாமலும், இனி நேரில் வேலை வாய்ப்பு அலுவகத்திற்கு வருகை புரியாது , அத்துறையின் இணையதளம் வழியாகவே பதிவு செய்துக் கொள்ளலாம் என்றும், அதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் ( இன்று ) அக். 4-2021 வழங்கப்படவுள்ளதை அடுத்து அக்.4-2021 முதல் 18-2021 வரை 15 தினங்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி மாணாக்கர்கள் பயின்ற பள்ளியிலயே இணையதளம் வாயிலாக வேலை வாய்ப்பு பதிவு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மேற் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன் படுத்தி மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுகள் மேற் கொள்ளலாம்.
மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணாக்கர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்புத் துறையின் இணைதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் ஆதார்அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற் கொள்ளலாம். மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.