மயிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன் முன்னிலை வகித்தனர். மேலும் அதில் பொறியாளர் இராமச்சந்திரன் பங்கேற்று நீர்வள ஆதாரம், நீரின் முக்கியத்துவம், மழை காலங்களில் தண்ணீரை சேமித்து கோடை காலத்தில் அதனை பயிர்களுக்கு எப்படி பயன்படுத்துவது குறித்தும் மேலும் விவசாயிகளின் பொறுப்புணர்வும், கடமையும், நீரின் பற்றாக் குறையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் காட்சிகளுடன் செயல் விளக்கத்துடன் எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை சட்டம் குறித்த காட்சி விளக்கம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து கேள்வி, பதில் பாணியில் வினாதாள் வழங்கி அவர்களின் திறன் வளர்ப்பு குறித்த தேர்வும் மேம்பாட்டு பயிற்சியில் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. அதில் கொள்ளிடம் தெற்கு ராஜன் பாசன பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் அப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.