ராமநாதபுரம், செப். 22- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அலுவலர்களிடம் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கையாக வார்டு வரையறை மற்றும் வாக்குச்சாவடி வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக வாக்காளர்கள்/பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக வார்டு வாரியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதிய உட்கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
இதுதவிர தேர்தல் பணிகளுக்காக தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள படிவங்கள் வாக்குப்பெட்டிகள் ஆகியவற்றின் நிலை குறித்து முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். தேர்தல் பணிகளுக்கு தேவையான கூடுதல் வாக்கப்பெட்டிகள் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், அத்தியாவசிய தளவாட பொருட்கள் ஆகியவைகள் குறித்தும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கணககீடு செய்து தயார் நிலையில் இருந்திட வேண்டும், என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
அதன்பின்புற தேர்தல் ஆணையர் மாவட்ட கருவூல அலுவலகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் முத்திரையிடப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான படிவங்கள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டபொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமன் (பரமக்குடி), கோபு (ராமநாதபுரம்), ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ாட்சி தேர்தல்) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், பேரூருாட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆய்வு கூட்டம்