PIC FILE COPY :
திருவண்ணாமலை, ஜூலை. 23 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏந்தல் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்பை அரசு உடனே அகற்ற அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு கலசப்பாக்கம் அடுத்த கட்டவரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அதிகாரிகள் மீட்டு பொதுப்பணித்துறை வசம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இதேபோல் மாவட்டத்தில் மற்ற இடங்களில் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திய அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தும், மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல இடங்களில் வருவாய் துறை, போலீசார் ஒத்துழைப்பு இல்லாததால், மீட்புப் பணிகளை சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், ஏந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட வருவாய் கிராமமான கீழ்நாத்தூரில் உள்ள சித்தேரியில் ஏரியை உடைத்து சட்ட விரோதமாக சிலர் வீட்டு மனை வியாபாரத்துக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்தும், அந்த இடத்தினை மீட்டு பூங்கா அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி பக்தவச்சலம், தமிழக முதல்வர், கலெக்டர், கோட்டாட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவதாக வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் இப்பணி தள்ளிச் சென்று வந்தநிலையில் தற்போது 4 வது முறையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிச் சென்றுள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் கடைபிடித்து சித்தேரியில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்றிட முன்வர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், ஊராட்சி மன்றம் சார்பிலும் தன்னார்வலர்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

















