கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இராமநாதபுரம்: மே.15-
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற சரக்கு வாகனத்திற்கு ஆய்வாளர் விஜயகாந்த் பூட்டு போட்டுள்ளார். வாகனத்தில் இருந்து கீழே இறங்குமாறு டிரைவரை ஆய்வாளர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த உச்சிச்புளி துத்திவலசையை சேர்ந்த
டிரைவர் கர்ணன், வாகனத்திலிருந்து இறங்கி ஆய்வாளரை கீழே தள்ளி கடுமையாக தாக்கினார் . ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற டிரைவர் கர்ணன் ஆய்வாளர் விஜயகாந்த் கழுத்தில் கடித்துவிட்டு தப்ப முயன்றார். சக போலீசார் கர்ணனை பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்துப்பகுதியில் 5 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிரைவர் கர்ணன் (எ) மாரியப்பன் 52, மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் காவல் ஆய்வாளரை, டிரைவர் ஒருவர் கீழே தள்ளி தாக்குதல் நடத்திய அச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.