கும்மிடிப்பூண்டி, மே. 10 –
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில் புள்ளிமான் ஒன்று மிதப்பதாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத் தகவலைத் தொடர்ந்து, புள்ளிமானை மீட்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் காரம்பேடு ரவி சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் வனத்துறை அலுவலர் சுரேஷ்பாபு வின் தலைமையிலான வனத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் இறங்கி புள்ளி மானை பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் மீட்டு மாதர்பாக்கம் வனச்சரக அலுவலர் சுரேஷ் பாபுவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக நேமலூர் வனப்பகுதியில் வனச்சரகர்கள் புள்ளிமானை விட்டனர். இப்புள்ளிமான் இரைத்தேடியோ, அல்லது கோடை வெயிலின் தாக்கத்தால் குடிநீர் தேடியோ இப்பகுதிக்கு வந்திருக்க கூடும் என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுப்போன்று அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து புள்ளிமான்கள் வருவதுண்டு என தெரிவிக்கின்றனர்.























