ஆவடி, மே. 13 –
சுங்கச்சாவடிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என தமிழக நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அக்கட்டத்தில் தரைதளம் உள்ளிட்ட 3 தளங்கள் வடிவமைக்கப்பட்டு இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் பொதுப் பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் நாசர் ஆகியோர் இரண்டு தளங்கள் வரை சென்று பார்வையிட்டு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு, ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட 45 சுங்கச்சாவடிகள் உள்ளது. இங்கு உரிய விதி முறைகள் பின்பற்ற படுகிறதா என தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், மாநில அரசே சுங்கச்சவடிகளை பராமரித்து அதில் வரும் தொகையை சாலை அமைத்த நிறுவனங்களுக்கு அளிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் தெரிவித்தார்.
மேலும், விவசாய நிலங்களில் சாலைகள் அமைக்கப்படுவதாக கூறுகின்றனர். விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படாத வகையில் சாலைகள் நேர் கோட்டில் அமைக்க வேண்டும் எனபதுதான் அரசின் நோக்கம் அதே சமயத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் எடுக்க வேண்டும் என்றால் சாலைகளே இருக்காது வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் உருவாகும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சென்னை -திருப்பதி சாலை விரிவாக்கப் பணிகள் TPR தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகளை தமிழக அரசு சார்பில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.