சென்னை, செப். 28 –

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வடசென்னைப் பகுதிகளில் எதிர் கொள்ளயிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகள் தூர்வாரல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கழிவு படிவங்கள் அகற்றும் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இப் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த செப் 20 முதல் நடைப் பெற்று வருகின்றன, அதன் ஒரு பகுதியாக வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைப்பெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை இன்று பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், ஓட்டேரி நல்லா கால்வாய், பாடி மேம்பாலம் அருகில் தொடங்கி வட சென்னை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் பேசின் பாலம் அருகில் வந்து இணைகிறது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.84 மீட்டர் நீளமுள்ள இக்கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை ரூ. 44 இலட்சம் மதிப்பில் கனரக வாகனங்கள் மற்றும் மிதவை இயந்திரங்கள் கொண்டு அவற்றை அகற்றும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. முதலமைச்சர் திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்ட்ரான்ஸ் ரோடு மற்றும் கொண்ணூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நீர்வள ஆதார துறையின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை கள ஆய்வு மேற்கொண்டார்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், கொளத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 30 இலட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் 769 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் மண்டலம், வார்டு எண் 94 ல் பாபா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரையும் மற்றும் அருகில் உள்ள பூம்புகார் நகர், ஜானகிராம் காலனி, எஆஃ.ஆர்.பி.நகர், சீனிவாசா நகர், செந்தில் நகர், உமா மகேஷ்வரி நகர், செல்வி நகர், அஞ்சுகம் நகர், சரோஜினி நகர், ஐயப்பா நகர், கே.கே.ஆர்.கார்டன், பழனியப்பா நகர், ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 33 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் நடைப்பெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாதவரம் மண்டலம் பிரிட்டானியா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரையும் மற்றும் கலெக்டர் நகர், செந்தில் நகர், வேலம்மாள் நகர், ஐ.என்.டி.யூ.சி. நகர், பிர்லா அவென்யூ, ரங்கா அவென்யூ, ராசி நகர், ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரையும் வெளியேற்றும் வகையில் 31 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.122.85 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மணலி மண்டலம் ஆமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் நீர்வளத்துறை சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பில் நடைப்பெற்று வரும் ஆகாயத்தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணிகளையும், உபரி நீர் கால்வாயின் பாலங்கள் சீர் செய்யும் பணிகளையும் , கொசஸ்தலையாறு காரைகளை பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தண்டையார்பேட்டை மண்டலம் கொடுங்கையூர் கால்வாயில் தேங்கியுள்ள சேறு, சகதி, ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை ரொபாடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாய் இணையும் இணைப்பு கால்வாயில் ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு ஆகாயத்தாமரை மற்றும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற் கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவும், முழுமையாக இப்பணிகளை முடிக்கக் கூடிய வகையில் தினமும் கண்காணித்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையினை அனைத்துத் துறை அலுவலர்களும் அளித்திடவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், அரசு முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here