சென்னை செப். 28 –

எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டம் எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியமாக 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்ட டத்தின் தரைத்தளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக்கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் காவல்துறையில் அன்று முதல் இன்று வரை பயன்படுத்தப் பட்டு மற்றும் பயன் படுத்தி வரும் துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள் முதலியவற்றை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் , காவல் துறையில் சிறப்பாக பணி செய்த காவலர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை வழங்கப்பட்டு வரும் மாதிரிப் பதக்கங்களும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள் காவல்துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயக் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் தமிழக காவல்துறையின் தொடக்கக்கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள் வரலாற்று சிறப்பு மிக்க செய்தித் தொகுப்புகள் காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பெரும் பொருட்கள் அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்பு கருவிகள்,   காவல்துறை சேவைப் பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

இக்காவல் அருங்காட்சியகத்தில் கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா தீ தடுப்பு சாதனங்கள் குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதலமைச்சர் கலந்துரையாடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த அருங்காட்சியகத்தை காண வரும் அனைவருக்கும் வரும் செப் 30-2021 வரை இலவச அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் அக் 1 முதல் பள்ளி மாணக்கர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அனுமதி கட்டணம் இருக்கும் என தெரிய வருகிறது. அதற்கான கட்டணத் தொகையும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், தமிழ்நாடு காவல் உடற்பயிற்சியக இயக்குநர் முனைவர் அ.அமல்ராஜ், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here