மீஞ்சூர், செப். 14 –
மேம்படுத்தப்பட்ட மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார மையத்தில் ஒரு மாதத்திற்கு, 35 திலிருந்து 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடை பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர், வளாகம் முழுதும் கண் காணிப்பு கேமராக்கள், போதிய படுக்கை வசதிகளுடன் சுகாதார நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில்,மத்திய சுகாதாரத் துறையின், தரக்கட்டுப்பாடு கண்காணிப்பு குழு, இரண்டு முறை மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தது. அக்குழுவின் பரிந்தரையின்படி,தேசிய சுகாதார குழுமத்தின் சார்பில் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர உறுதி திட்ட விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
சென்னையில் நடை பெற்ற விழாவில்,மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலர் வாயிலாக விருதை, மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் பெற்றார். அவசர சிகிச்சை,விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, மகப்பேறு பரிசோதனை மேற்கொள்வது, மருந்துகளை கையாளுவது, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தது, அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டது மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக, மத்திய சுகாதாரத்துறை இந்த விருதை வழங்கி உள்ளது.