மல்லசமுத்திரம், ஜூலை. 22 –
ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இப்பணிக்காக, நெடுஞ்சாலைதுறை மூலம், பழைய பாலத்தை அகற்றிவிட்டு, தற்காலிகமாக புதிய சிறிய தரைப்பாலம் ஒன்று அமைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆத்துமேட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து செல்கின்றது.
இந்நிலையில் அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினால், இருபுறங்களிலும் பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் செல்ல முடியாமல், கடும் அவதிக்கு உள்ளாகி பல கி.மீட்டர் தூரம், சுற்றி சென்று வருகின்றனர்.





















