திருவாரூர், ஜூன். 25 –
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அறிவிக்கப்பட்டு, அம்முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இம் மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் ஆகியோர் இம்மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இம்முகாமில் தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்தப் பரிசோதனை , பொது மருத்துவச் சிகிச்சை, எக்கோ, இசிஜி, பொது அறுவை சிகிச்சை, கா்ப்பிணிப்பெண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல், மனநல மருத்துவச் சிகிச்சைகள் குறித்து மருத்துவ பயனாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.