சென்னை, மே. 09 –
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா (34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள (Assyst Career Generating Pvt Ltd) என்ற நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார்.
அங்கு கிளீனா கிரியேட்டர் (29), மற்றும் அவரது அம்மா அனிதா கிரியேட்டர் (59), நல்ல விதமாக பேசி 25,00,000 லட்ச ரூபாய் பணத்தை பெற்று போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் இந்த பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் அவரை ஏமாற்றி வந்தனர். நெருக்கடி கொடுத்த போது கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் வரை திரும்ப தந்து விட்டனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை அனைத்து வைத்து விட்டனர், அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக 22-12-2021 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சி.எஸ்.ஆர். பதிவு செய்து கிடப்பில் போட்டனர். பின்னர் தன்ஷிகா அடையார் துணை ஆணையர் மகேந்திரனை கடந்த மாதம் அணுகினார். அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, லுக் அவுட் நோட்டிசும் வழங்கினார்.
இன்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். கிளீனா அமெரிக்கா செல்லவிருந்ததாகவும், அவரது தாய் வழியனுப்ப சென்றிருந்தார். அப்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்ததால் அவர்களை பிடித்து விமானநிலையக் காவலர்கள் வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இருவரையும் கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இது போல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. பின்னர் இருவரையும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.





















